Wednesday, December 05, 2007

'வேல்' படம் பார்த்துக் கெட்ட சிறிலங்கா அரசாங்கம்

கடந்த நவம்பர் 28 ஆம் நாள் கொழும்பில் குண்டுவெடிப்பொன்று நிகழ்ந்ததில் 18 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.
அந்தக் குண்டுவெடிப்புப் பற்றிய மேலதிக செய்தியொன்று இணையத்தளத்தில் (புதினம்?) வந்திருந்தது.

அந்த அங்காடிக்கு வந்த ஒருவர் குறிப்பிட்ட பையொன்றைக் கொடுத்துவிட்டு அங்காடிக்குள் சென்றுள்ளார். பின் சிறிது நேரத்தின்பின் வெளியே வந்த அவர் பையை வாங்காமல் சென்றுள்ளார். முன்பு பையைக் கையளித்துவிட்டுச் சென்றவர் அவர்தான் என அடையாளம் கண்ட பணியாளரால், பையை வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்ட போதும்கூட அவர் பையை வாங்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பணியாளர் காவல்துறைக்கு அறிவித்தார். பின்னர் குண்டு செயலிழக்கச் செய்யும் அணியோடு காவல்துறை அங்கு வந்தது. குண்டைச் செயலிழக்கச் செய்ய முற்பட்டபோது குண்டுவெடித்ததில் அவ்வங்காடியில் இருந்தவர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் பலர் காயமடைந்தனர்.

மேற்படிச் செய்தி உண்மையானால் சிறிலங்கா அரசாங்கத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் அணியின் முட்டாள்தனத்தை என்னவென்பது?
குண்டைச் செயலிழக்கச் செய்யுமுன்னர் நியம ஒழுங்கொன்றுள்ளது. இது எல்லாச்சந்தர்ப்பங்களிலும் பொருந்தும். முதலில் அங்கிருந்து அனைவரையும் வெளியேற்ற வேண்டும். செயலிழக்கச் செய்யப்போகும் குண்டு வெடித்தால் ஏற்படும் சேதங்களை இயலுமானவரை குறைக்க முயற்சிகள் மேற்கொண்ட பின்னரே அதைச் செயலிழக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்பணியில் குண்டுவெடித்தால் அதைச் செயலிழக்கச் செய்ய எத்தனித்தவர்(கள்) மட்டுமே கொல்லப்பட வேண்டும். இது உலகப் பொது நடைமுறை. இதைக்கூடக் கைக்கொள்ளத் தெரியாமல் பல பொதுமக்களைக் கொலைசெய்துள்ளது அந்தக் குண்டு செயலிழக்கச் செய்யும் குழு.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குண்டைச் செயலிழக்கச் செய்வதற்கான நிகழ்தகவு நூறு வீதமிருப்பதில்லை. ஐம்பது வீதம் கூட இருப்பதில்லை. அதுவும் பிறரால் பொருத்தப்பட்ட குண்டைப்பொறுத்தவரை - அதன் பொறியமைப்பு, செயற்பாடு என்பவை தெரியாமலிருப்பதால் - இது சாத்தியமேயில்லை. படங்களில் காட்டுவதைப்போல் ஒரு வயரை வெட்டிவிட்டால் எல்லாம் சரி என்பதல்ல. வயரை வெட்டினால் வெடிக்கக்கூடியதாக ஒரு பொறியமைப்பைத் தயாரிக்க அதிகம் மினக்கெடத் தேவையுமில்லை.

சரி, இந்த முட்டாள்தனமான யோசனையை சிறிலங்காவின் குண்டு செயலிழக்கச் செய்யும் குழு எங்கிருந்து பெற்றிருக்கும்? எக்காரணி அவர்களை இப்படியொரு வேலையைச் செய்யத்தூண்டியிருக்குமென்று நாம் புலனாய்ந்ததில் கிடைத்த விடைதான் 'வேல்' என்ற பெயரோடு அண்மையில் வெளிவந்த தமிழ்த்திரைப்படம்.

அப்படத்தில் சர்க்கரை ஆலையொன்றில் குண்டைப் பொருத்திவிடுவார்கள். அது வெடிக்கப்போகிறது. குண்டுபொருத்தப்பட்ட விசயத்தைக் கண்டுபிடித்த நாயகன் உரியவர்களுக்குச் சொல்லி, குண்டு செயலிழக்கச்செய்யும் அணியையும் அழைத்துவந்துவிடுவார். குண்டு வைக்கப்பட்டுள்ள செய்தியைக் கேட்டதும் ஆலையில் வேலை பார்க்கும் மக்கள் அனைவரும் வெளியேறி ஓடிவிடுவார்கள்.
பின்னர் நாயகனும் அவரது அடிதடிகளும் காவல்துறையும் சில நாய்களும் சேர்ந்து குண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். நாயகனுட்பட அனைவரும் குண்டைச்சுற்றி புடைசூழ்ந்து நின்றுகொண்டு கண்கொட்டாமல் குண்டையே பார்த்திருக்க, அதிலிருக்கும் ஒரு வயரை வெட்டி அதைச்செயலிழக்கச் செய்வார் பொறியியலாளர்.

இந்தக் காட்சிதான் சிறிலங்காவின் குண்டு செயலிழக்கச் செய்யும் அணியையும் குழப்பியிருக்க வேண்டுமென நாம் சந்தேகிக்கிறோம். ஆனாலும் அந்தப் படத்தில் ஆலையில் பணியாற்றிய அனைத்துப் பொதுமக்களையும் வெளியேற்றிய காட்சியையாவது விளங்கியிருந்தால் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

+++++++++++++++

Labels: ,

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4